திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்து, அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்து, மீண்டும் அதிமுகவில் ராதாரவி
சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. என்ற பிரபல கவுண்டமணி காமெடி வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ராதாரவிக்கு, நச்சுன்னு பொருந்தும்.
சமகால அரசியல் வரலாற்றில் யாரும் அடித்திட முடியாத அளவுக்கு அந்தர் பல்டிகளை அடித்த சாதனைக்கு சொந்தக்காரர் இவர். காலையில் பேப்பரை பார்த்தோ, அல்லது, உடனுக்குடன், 'ஒன்இந்தியாதமிழை' பார்த்தோதான், ராதாரவி இன்று எந்த கட்சியில் இருக்கிறார் என்று சொல்ல முடியும் என்ற சொலவடை தமிழக அரசியலில் உருவாகிவிட்டது உங்களுக்கு தெரியுமா?
வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடும் படம் என போஸ்டர் அடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், 'வெற்றிகரமாக இன்று 'மீண்டும்' அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி' என்று போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள் அவரின் நண்பர்கள் என்றால் நம்ப முடியாது உங்களால்!
திமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி
ராதாரவி அரசியல் பிரவேசம்
மூத்த திரைப்பட கலைஞர், அரசியல் பின்புலம் கொண்டவர் எம்.ஆர்.ராதா. அவரது மகன் என்பதாலேயே, ராதாரவிக்கு, திரையுலகத்திற்கு வந்தது முதல் ரத்தினக் கம்பள வரவேற்பு கிடைத்தது. நம்மூரில்தான், சினிமாவில் கொஞ்சம் பெயர் வாங்கிவிட்டால், அரசியலுக்கு போய், கோட்டையை பிடிக்கனும் என்கிற ஆசை தூக்கத்தில் கூட வந்துவிடுமே.. அதற்கு ராதாரவி மட்டும் விதிவிலக்கா என்ன?
திமுகவிலிருந்து ஜம்ப்
திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் காலடி எடுத்து வைத்தார் ராதாரவி. அவரது தந்தை கொள்கைக்கும் கூட, திமுகதான் சரியான கட்சியாக இருந்திருக்க முடியும். குறுகிய காலத்திலேயே, திமுகவில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஆனால், படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது உதவினார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா. இதையடுத்து அதிமுகவுக்கு தாவினார், ராதாரவி.
எம்எல்ஏ ராதாரவி
அதிமுகவிலும் விறுவிறுவென கோலோச்சினார். சைதாப்பேட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், திமுகவின் பலம் பொருந்திய வேட்பாளரான, மா.சுப்பிரமணியனை வீழ்த்தி, எம்எல்ஏவானார், ராதாரவி. அரசியலில் முத்திரை பதித்ததோடு, அதை பயன்படுத்தியோ என்னவோ, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவியை பிடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில், ராதாரவி போக்கு பிடிக்காத ஜெயலலிதா, அங்கேயிருந்து கல்தா கொடுத்தார்.
மீண்டும் திமுக
இதன்பிறகு மீண்டும், திமுகவுக்கே ஓடி வந்தார் ராதாரவி. அதுவும் ரொம்ப காலம்லாம் இருக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட பிறகுதான், இந்த ஜம்ப் நடந்தது. இதோ, இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி. நயன்தாரா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுதான், இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால், அப்பாடா.. ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்பதுதான் ராதாரவி மனநிலையாக இருந்திருக்கும்.
கொள்கை இதுதானா
அதிமுக இல்லாவிட்டால் திமுக என மாறிக்கொண்டேயிருப்பதற்கும், இந்த மடம் இல்லாவிட்டால் சந்த மடம் என்பதை போன்ற மனநிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? இப்படியாக கட்சி மாறுவோருக்கு என்னதான் கொள்கை இருந்துவிட முடியும்? ஒருவேளை, கட்சி மாறுவதுதான் இவர்களுக்கு கொள்கையாகவே இருக்குமோ?