திமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியா.. ராதாரவி நறுக்
சென்னை: திமுகவை குறை கூறும் கமல்ஹாசன் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும் என ராதாரவி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவை தொடர்ந்து கமல்ஹாசன் விமர்சனம் செய்து வருவது குறித்து ராதாரவி கூறுகையில் திமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும். ரஜினி ஒரு நல்ல மனிதர், கமல் ஒரு நல்ல நடிகர்.
கமல் தொடர்ந்து நடித்து கொண்டே இருந்திருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர்கள் அனைவருமே கருப்பு வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும் என ராதாரவி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனும் கூட்டணி குறித்து பேசி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யாருடனும் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் அறிவித்தார்.
தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் திமுக ஒரு ஊழல் பொதி மூட்டை. அதை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார். இது திமுகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இதற்கு பதிலடியாக முரசொலியில் கமல் குறித்து கடுமையாக விமர்சனமும் வந்தது. இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.