உங்களையும், தந்தையையும் தாழ்த்தி விடாதீர்கள்.. மு.க.ஸ்டாலினுக்கு ராதிகா அட்வைஸ்!
நடிகைகள் குறித்த முக ஸ்டாலின் பேச்சிற்கு நடிகை ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம்.. உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள்" என்று திமுக தலைவருக்கு நடிகை ராதிகா காட்டமாக பதிலை அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் களம் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பிரச்சாரங்களும் அனல் பறக்கின்றன. அதன்படி முக ஸ்டாலினும் தன் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி ஆண்டிப்பட்டியிலும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
வணக்கம், நமஸ்காரம், பான்ஜூர்.. இதெப்படி இருக்கு.. இது நாராயணசாமி ஸ்டைலு!
விவசாயிகள்
அப்போது பேசிய ஸ்டாலின், "தமிழக விவசாயிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கே சென்றனர். அங்கேயே தங்கி 100 நாட்கள் போராட்டங்களை நடத்தினர். அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
பேசினாரா?
தங்களை அழைத்து பேசுமாறும் பிரதமருக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பிரதமர் அழைத்து பேசினாரா? தொழிலதிபர்களையும் பணக்காரர்களையும் அழைத்து பேசினார். கேவலம் நடிகைகளை அழைத்துப் பேசினார்" என்று தெரிவித்திருந்தார்.
கண்டனம்
ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழ் சினிமா உலகில் பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதற்கு நடிகை ராதிகா தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
உயர்ந்த இடம்
அதில், "ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள்" என பதிவிட்டு அதில் முக ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார்.
அப்பா என்று கூப்பிடுவார்
கருணாநிதி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர் ராதிகா. அவரது வசனத்தை பேசி நடித்து பாராட்டை பெற்றவர். சன் டிவியில் ராதிகாவின் அனைத்து சீரியல்களையும் தவறாமல் பார்த்து வந்தார் கருணாநிதி. எப்போதுமே ‘அப்பா' என்றே அவரை ராதிகா அழைப்பார்.
ஆறுதல் சொன்னார்
கருணாநிதி மறைந்தபோது வெளிநாட்டில் இருந்த ராதிகா, சென்னை திரும்பியதும் முதல்வேலையாக சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் கருணாநிதி வீட்டிற்கும் சென்று ஸ்டாலினையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த அளவுக்கு ஆழ்ந்த அபிமானியாக இருந்த ராதிகா, இன்று திமுக தலைவர் ஸ்டாலினையே விமர்சித்திருப்பது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.