ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு நடுவே நடந்ததே கிடையாது.. ஒரே போடாக போட்ட கபில் சிபல்
Recommended Video
சென்னை: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் என்பது இந்திய அரசுக்கும், பிரான்ஸ் நாட்டு அரசுக்கும் நடுவே ஏற்படுத்தப்பட்டதே கிடையாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கபில்சிபல் , பிரான்ஸ் நாட்டு அரசு, இந்திய அரசுடன் பாதுகாப்பு துறை சார்ந்த எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. எனவே ரஃபேல் கொள்முதல் என்பது அரசுகள் இடையேயான ஒப்பந்தம் கிடையாது.
டசால்ட் என்ற பிரான்ஸ் நிறுவனம் இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பது தான் உண்மை. டசால்ட் நிறுவனம், போர் விமானங்களை வழங்குவது குறித்து எந்த ஒரு உறுதி பத்திரத்தையும் வழங்கவில்லை. இதை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
பிரான்ஸ் அரசு சார்பில் ஒரு உறுதி கடிதம் மட்டுமே வந்துள்ளது. எனவே, இதனை அரசுக்கும், அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்று கூறக்கூடாது.
[நாங்க காசு கொடுப்போம்.. ஆனா அவங்க ஜெட் கொடுக்கணும்னு கட்டாயமில்ல.. அதிர வைத்த ரபேல் ஒப்பந்த ஓட்டை!]
விமானத்தை தயாரிக்க தேவைப்படும் காலக்கெடு என டஸ்சால்ட் நிறுவனம் அளித்துள்ளது, தவறான தகவல், என்று எச்ஏஎல் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு, டசால்ட் நிறுவனத்திடம் தெரிவித்தபோது அவர்கள் அதுபோன்ற எந்த ஒரு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்ய தயாராக இல்லை. 108 ரஃபேல் விமானங்களில் முழு பொறுப்பையும் டசால்ட் நிறுவனத்திற்கு தான் மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.