புயல் பாதித்த மூதாட்டியின் உறைய வைக்கும் வீடியோ.. இவருக்குத்தான் முதல் வீடு- ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டிக்குத்தான் முதல் வீடு என ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கஜா புயலால் திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்தன. இங்கு தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த புயலால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்ததோடு கால்நடைகளையும் இழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவியையும் நிவைரண பொருட்களையும் அளித்து வருகின்றனர்.
பேஸ்புக் பதிவு
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 50 வீடுகளை கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.
வேதனை
எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன். ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்.
நிரந்தர தீர்வு
அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும். மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும். அந்த வீடு மட்டுமில்லை . இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
பாதிக்கப்பட்டவர்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அன்பு பத்திரிகை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்" என்று கூறியிருந்தார்.
|
முதல் வீட்டை கட்டி தருவேன்
தற்போது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வீடுகளை கட்டித்தரும் பணியில் இறங்கியிருக்கும் லாரன்ஸ் குழுவினர் கூரை வீட்டை இழந்த ஒரு மூதாட்டியை கண்டறிந்துள்ளனர். அவர்களுடன் அந்த மூதாட்டி உரையாடும் வீடியோவை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று மூதாட்டியிடம் குழுவினர் கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு `ஒரு குடிசை மட்டும் போதும்' என்று கூறுகிறார். இந்த வீடியோ பலரையும் நெஞ்சை உறையவைத்துள்ளது. இந்த மூதாட்டிக்கு தனது முதல்வீட்டை கட்டித் தருவதாக லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.