'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அன்புதான் தமிழ் என்கிற அரசியல் சார்பற்ற அமைப்பை தொடங்குவதாக திடீரென அறிவித்துள்ளார்.
திரைப்பட விழா மேடைகளில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இதற்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், சீமான் மட்டும்தான் தமிழ்த் தாயின் பிள்ளையா? ஆம்பிளையாக இருந்தால் அனைவருடனும் அரசியலில் ஓட வேண்டும் என காட்டமாக பேசியிருந்தார். இதற்கும் நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மன உளைச்சலில் நான்..
இந்நிலையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளதாவது: நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்!
தவறான விமர்சனம்
மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். நான் ஒரு தனி மனிதன். எனக்கென்று தனிக் கூட்டமில்லை.
தனி அமைப்பு
நான் படிக்காதவன்.ஒரு தனி மனிதனாய் நின்று, ‘அன்புதான் தமிழ்' என்கிற, அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். இந்த அமைப்பின் மூலம்,தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும், தமிழரின் அன்பையும், உலகறிய செய்வதே அதன் நோக்கம்.
குறளை பின்பற்றி
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்' என்பது திருக்குறள் அதை பின்பற்றியே எதிரிக்கும் உதவி செய். பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை. நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு. உள்ளத்தால் ஒன்றே.
அறம்சார் சேவை அமைப்பு
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும். இறுதியாக ஒன்று. என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.