ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி: கன்னி ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: மென்மையான மனசு கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இளகிய மனசுதான் உங்களோட பலம் அதுவே உங்க பலவீனமும் கூட. உங்க துக்கத்தை மறைத்துக் கொண்டு சந்தோஷத்தை மட்டுமே அனைவரிடமும் பகிர்ந்து கொள்வீர்கள். இதுநாள் வரை ராகு உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிலும் கேது உங்க ராசிக்கு நான்காம் வீட்டிலும் சஞ்சரித்தனர். இனி ராகு கேது உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு என்ன செய்யப் போகிறது என்று பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அர்த்தாஷ்டம சனி போராட்டத்தை ஏற்படுத்தியது. அம்மாவிற்கு பல சோதனைகளை கொடுத்தது நான்காம் வீட்டில் கேது பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அம்மா உடன் பல கருத்து வேறுபாடுகளை கொடுத்து வந்தது. இனி இந்த பிரச்சினைகள் உங்களுக்கு படிப்படியாக நீங்கப்போகிறது.
பத்தில் ராகு பதவியை பதம் பார்த்தது, வீட்டில் பல பிரச்சினைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். வேலையில் பல நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள். தடுமாற்றம், காரிய தடைகளை ஏற்படுத்தி கொடுத்தது. இனி பாக்ய ஸ்தான ராகு, முயற்சி ஸ்தான கேதுவால் உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். நல்ல ஏற்றங்களையும் மன மகிழ்ச்சியை தரப்போகிறது. வாழ்க்கையில் பொற்காலத்தை தரப்போகிறது.
ராகு பெயர்ச்சியால் என்ன பலன்
ராகு இதுநாள் வரை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் இருந்தார் இனி ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நல பிரச்சினைகள் நீங்கும். மன குழப்பங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சமூகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராகுவின் பார்வையால் கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
நெருக்கடிகள் நீங்கும்
தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நஷ்டத்தை சந்தித்து வந்தவர்கள் இனி லாபத்தை ருசிக்கத் தொடங்குவீர்கள். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். தோஷங்கள் நீங்கி புத்திர பாக்கியம் தேடி வரும் ஒன்பதாம் வீட்டில் ராகு அமர்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் கவனத்தோடு இருப்பது அவசியம்.
சகோதரர்களால் சந்தோஷம்
கேது பகவான் விருச்சிகம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. சகோதரர்களுடன் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். பாசமும் நேசமும் அதிகரிக்கும். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய நேரம் வந்து விட்டது. கேதுவின் பார்வையால் பேச்சில் கவனமாக இருக்கவேண்டும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருப்பது அவசியம்.
கவனம் தேவை
கடந்த காலங்களில் சனி கேது சேர்க்கை கூட குரு இணைவு என உங்களை துயரத்தில் ஆழ்த்தியது. இனி கேதுவின் மாற்றம் உங்களின் உடல் நல பிரச்சினைகளை சரி செய்து கொடுக்கும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். பணம் முதலீடுகளில் கவனமாக இருங்க. யாரை நம்பியும் பணம் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவே வேண்டாம். அப்புறம் பணம் திரும்ப வரும் என்று நினைக்கவே முடியாது.
கவலைகள் மாறும் காலம்
இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னிராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் நீங்கும், கவலைகள் மாறும் காலம் வந்து விட்டது. தொட்டது துலங்கும். பழி பாவங்கள் நீங்கும். வம்பு வழக்குகள் விலகும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள். சின்னச் சின்ன பாதிப்புகளும் நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசத்தை வணங்குங்கள். விநாயகரை சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய பாதிப்புகள் நீங்கி நல்லதே நடக்கும்.