அமித்ஷா, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு கொரோனா- நலம்பெற வாழ்த்திய ராகுல், ஸ்டாலின்
கொரோனா பாதிப்பில் இருந்து உள்துறை அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2 கோடி பேரை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. அரசியல் கட்சித்ததலைவர்களும் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர், தமிழக ஆளுநர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரையும் இந்த கொரோனா டச் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களை இந்த கொரோனா எதுவும் செய்வதில்லை, நோயுடன் எதிர்த்து போராடி பல லட்சக்கணக்கானோர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்
கொரோனா பாதிப்பினால் சிகிச்சை
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமித்ஷாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிமைபடுத்திக்கொண்ட ஆளுநர்
இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ராகுல்காந்தி வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் அமித்ஷா குணமடைய வேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார். கட்சி கொள்கை ரீதியாக வேற்றுமைகள் இருந்தாலும் அமித்ஷாவிற்கு உடல்நல பாதிப்பு என்ற உடன் நலம் பெற வேண்டியுள்ளார் ராகுல்காந்தி
அமித்ஷா நலம் பெற வாழ்த்திய ஸ்டாலின்
இதேபோல திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தேன். அவர் விரைந்து குணமடைந்து, நல்ல உடல்நலனைப் பெற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.
ஆளுநருக்கும் வாழ்த்து
இதே போல ஆளுநர் விரைவில் நலம் பெறவும் வாழ்த்து கூறியுள்ளார் ஸ்டாலின். மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். கட்சி பேதமின்றி அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைய அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.