Rahul Gandhi:வடஇந்தியாவை விட தென்னிந்தியா சூப்பர்.. பெண்களை இங்கு மதிக்கிறார்கள்.. ராகுல் பாராட்டு!
வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறாரகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
சென்னை: வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறாரகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். பிரதமர் மோடி தொடங்கி ரபேல் ஊழல் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாற்றினார்.
ராகுல் காந்தி மட்டும் இதை செய்தால்.. பொள்ளாச்சி வழக்கு தேசிய வைரலாகும்.. செய்வாரா?
தமிழகம் முன்னோடி
ராகுல் தனது பேச்சில், வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறார்கள். நடத்தப்படுகிறார்கள். இதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. தமிழகத்தை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மோடி யோசனை
மோடி உங்களிடம் வந்து யோசனை கேட்டிருந்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து யோசித்திருப்பார். அது தவறானது என்று அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் அவர் இதுகுறித்து யாரிடமும் ஆலோசிக்கவில்லை. எவரிடம் எதையும் கேட்காமல் அவர் முடிவெடுத்துள்ளார்.
பெண்கள் சமம்
பெண்களை நாம் சமமாக கருத வேண்டும். மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும். நாடு முழுக்க ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர பாஜக முயல்கிறது. ஆனால் நம் நாடு பல கலாச்சாரங்களை கொண்டது. இந்தியாவின் பன்முக தன்மையை நாம் மதிக்க வேண்டும்.
ரபேல் வழக்கு
ரபேல் வழக்கில் மோடியை விசாரிக்க வேண்டும். அனில் அம்பானிக்காக மோடி ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி இருக்கிறார். அனில் அம்பானி விமானம் தயாரித்ததே கிடையாது. அனில் அம்பானிக்காக ரபேல் ஒப்பந்தத்தை அள்ளிக் கொடுத்துள்ளார் மோடி.
நீரவ் மோடி
நீரவ் மோடியை விசாரிக்க வேண்டும். அவரை இந்தியா கொண்டு வர வேண்டும். மல்லையாவை இந்தியா கொண்டு வர வேண்டும். நாம் எல்லோரையும் விசாரிக்கலாம். நீரவ் மோடியையும் விசாரிக்கலாம், ராபர்ட் வத்ராவையும் விசாரிக்கலாம்.
ஜிஎஸ்டி கேள்வி
ஜிஎஸ்டியால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வரும். சிக்கலான ஜிஎஸ்டிக்கு பதிலாக எளிமையான ஒரே வரியைக் கொண்டு வருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.