நடுக்கடலில் நீச்சல், ஒற்றைக்கையில் தண்டால், அய்கிடோ கராத்தே- ராகுலுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள்!
சென்னை: மக்களோடு, மக்களாக கலந்து பிரசார பயணங்களில் பெரிதும் கவனம் ஈர்த்து வருபவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
Recommended Video
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு அய்கிடோ என்னும் ஜப்பானிய கராத்தே முறையின் அசைவுகள் குறித்து ராகுல் காந்தி அந்த மாணவரின் கையை பிடித்து சொல்லிக் கொடுத்தது அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பிரசாரம் என்னும் ஆயுதம்
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் முக்கிய ஆயுதமாக பயன்படுவது பிரசாரம். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்பட சில தலைவர்களின் பிரசாரம் அடித்தட்டு மக்களை கவரும் வகையிலும், புரியும் வகையிலும் இருந்ததால் அவர்களுக்கு ஓட்டு எளிதாக வந்து விழுந்தது. இதனால்தான் ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் வரிசைப்படுத்தப்படுவர்.
மக்களை கவரும் ராகுல் காந்தி
அந்த வகையில் இந்த தேர்தலில் மக்களோடு, மக்களாக கலந்து பிரசார பயணங்களில் பெரிதும் கவனம் ஈர்த்து வருபவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தில் பிரசாரதிற்காக நுழைந்தது முதல் ஒவ்வொரு நாளும் மக்களை கவர்ந்து வருகிறார் ராகுல் காந்தி. கடந்த மாதம் கொங்கு மண்டலததில் முதற்கட்ட பிரசார பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கரூரில் Village cooking channel எனப்படும் யுடூயூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று காளான் பிரியாணிக்காக அழகுத் தமிழில் பேசி வெங்காய ரைத்தாவை அவர் கலக்கியது அனைவரையும் கவர்ந்தது. பின்னர் சாதாரணமாக சம்மணமிட்டு அவர் காளான் பிரியாணியை ஒரு வெட்டு, வெட்டியதன் மூலம் மக்களோடு மக்களாக கலந்தார் ராகுல் காந்தி.
அழகுத்தமிழில் பேசுகிறார்
கொங்கு மண்டலத்தை சுற்றி வந்த ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரம் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் பேசினார். மாட்டு வண்டியில் பயணிப்பது, சாலையோர கடைகளில் டீ, இளநீர் குடிப்பது என அனைவரையும் சுண்டியிழுத்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி. இந்த பிரசாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார் அவர். நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட்டது, தென்காசி அருகே சாலையோர கடையில் டீ குடித்து அழகுத்தமிழில் டீக்கடைக்காரரை பாராட்டியது என தனித்துவமான செயலில் ஈடுபட்டார்.
தனது பிட்னஸ் நிரூபித்த ராகுல்காந்தி
இந்த நிலையில் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி செய்த செயல்தான் இவருக்கு 50 வயசா, அதுமாதிரி தெரியலியே என அனைவரையும் பேச வைத்தது. முளகுமூடு பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அங்கிருந்த ஒரு மாணவியை தண்டால் போட்டிக்கு வரச் சொன்னார். ராகுலும், மாணவியும் தண்டால் எடுக்க போட்டி ஆரம்பமானது. அந்த மாணவி மெதுவாக தண்டால் எடுக்க, முதலில் இரண்டு கையாளும், அதன்பிறகு ஒரு கையாளும் 20 வயது வாலிபனை போல் மிக வேகமாக தண்டால் எடுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, தனது உடல் பிட்னஸையும் நிரூபித்தார் ராகுல் காந்தி.
|
மாணவருக்கு கராத்தே-சொல்லிக் கொடுத்தார்
அதன்பின்னர் ஒரு மாணவரை மேடைக்கு வரவழைத்து அவருக்கு அய்கிடோ என்னும் ஜப்பானிய கராத்தே முறையின் அசைவுகள் குறித்து ராகுல் காந்தி அந்த மாணவரின் கையை பிடித்து சொல்லிக் கொடுத்தது அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போதுதான் ராகுல் காந்தி அய்கிடோ என்னும் ஜப்பானிய கராத்தே கலையில் பிளாக் பெல்ட் வாங்கியது அறிந்து அனைவரும் வாயடைத்து போயினர். சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் நடுக்கடலுக்கு சென்று கடலில் குதித்து நீச்சலடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். இவ்வாறு ராகுல் காந்தி வித்தியாசமான பிரசார முறையில் ஈடுபட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.