ஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு
சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அனைவரது புருவங்களையும் உயர்த்திவிட்டார்.
நாகர்கோவிலில் இன்று பிற்பகல் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார்.
சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட, நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
கரை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக அரசியல்வாதிகளைப் பார்த்து பழக்கப்பட்ட தமிழக மாணவர் சூழலில், ராகுல் காந்தியின் ஆடை அலங்காரம் என்பது வித்தியாசமாகத்தான் காட்சியளித்தது. ஐடி கம்பெனிக்கு வேலைக்கு செல்ல கூடிய ஒரு இளைஞரைப் போல ஜீன்சும், டீ ஷர்ட்டையும் அணிந்து வந்திருந்தார் ராகுல் காந்தி.
டெல்லியில் இருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழர்களுக்கு அவமானம்- ராகுல் காந்தி
நீல வண்ண ஜீன்ஸ் பேண்ட், அடர் வண்ண டி-ஷர்ட்டில் ராகுல் காந்தி மிகவும் இளைஞரைப் போல காணப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒருவர் இவ்வளவு எளிமையாக பழகியதை பார்த்து மாணவிகளே சற்று ஆச்சரியம் அடைந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ராகுல் காந்தி பொதுவாக வெள்ளை நிற குர்தா அணிந்து கொண்டு பிரச்சாரங்களில் பங்கேற்று உள்ளதைப் பார்த்து உள்ளார்கள் தமிழக மக்கள். ஆனால் கல்லூரி மாணவரை போலவே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அசத்திவிட்டார் ராகுல் காந்தி.
வழக்கத்தை விட அவரது முகத்தில் மிகுந்த உற்சாகமும் காணப்பட்டது. தனது உரையாடலின்போது தனக்கே உரித்தான பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை சரமாரியாக விமர்சனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. ராகுல் காந்தியின் இந்த கெட்அப் மற்றும் உரையாடல் இளம்பெண்கள் மத்தியில் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.