முன்னாள் அமைச்சர் சதீஷ் சர்மா மறைவு... அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி - உடலை தோளில் சுமந்து மரியாதை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது உடலை தன்னுடைய தோளில் சுமந்து சென்றார்.
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சதீஷ் ஷர்மாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ராகுல்காந்தி எம்.பி, இறுதி அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாது அவரது உடலையும் தனது தோளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் ஷர்மா கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராவார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சதீஷ் சர்மா கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கோவாவில் காலமானார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சதீஷ் ஷர்மா மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, கேப்டன் சதீஷ் ஷர்மா இறந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். மிஸ் யூ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற மறைந்த சதீஷ் சர்மா இறுதி சடங்கில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ராகுல் காந்தியும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சதீஷ் ஷர்மாவின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தியும் தனது தோளில் தாங்கி சுமந்து சென்றார்.
அப்பாவின் சக நண்பரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாது மகனைப் போல தோள் கொடுத்து தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.