பாரம்பரிய வாக்குகளை மீட்க ராகுல் காந்தி முயற்சி.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?
சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில்
அமைந்துள்ளதோடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் தேவையான இடங்களை பெறுதவதற்கான தளத்தையும் அமைத்து கொடுத்துள்ளது.
கூட்டணி பேச்சு வார்த்தையில் தி.மு.கவிடம் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெறுவதற்கு, ராகுலின் பிரச்சாரம், ஏதுவாக அமைந்துள்ளது.
சட்ட பேரவை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறிய காட்சிகள் முந்தைய தேர்தல் காலங்களில் நடைபெற்றதை தமிழக மக்கள் கண்டுள்ளனர். அதே போல் இந்த தேர்தலும் பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
காங்கிரஸ் அதிருப்தி
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் அதிருப்தியுடன் உள்ளது காங்கிரஸ் கட்சி. 40க்கு குறைவான தொகுதிகளை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த காங்கிரஸ்க்கு, 15 முதல் 18 வரை மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க கூறியது. இதனால், கூட்டணி குறித்து மறுபரிசிலனை செய்யும் முடிவுக்கு காங்கிரஸை தள்ளியுள்ளது.
பாரம்பரிய வாக்குகள்
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கிகளை குறி வைத்தே பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி காமராஜரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சாரங்களை மேற்கொண்டார். ராகுல் காந்தியின் இந்த பிரச்சாரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்யவதற்கான தைரியத்தை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தி.மு.கவின் பிடிவாதம் காங்கிரஸ் கட்சி கூட்டணியை "மறுபரீசலனை செய்யலாம்" என்ற முடிவை எட்ட வைத்துள்ளது.
திமுக கூட்டணி
இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 12 இடங்கள் வரை கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க கல்தா கொடுத்துள்ளது. வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க தெரிவித்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிட்டது.
நீடிக்குமா காங்கிரஸ்
அதே போல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சு வார்தையின் போதும் தி.மு.க பிடிவாதம் காட்டியதால் அக்கட்சியும் பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால், தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்தையில் இழுபறி நீடிப்பதோடு, கட்சிகள் கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எத்தனை முறைதான் தி.மு.கவுடன் கூட்டணி வைப்பது என்று ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்த நிலையில், ராகுல் காந்தியின் கடந்த மூன்று நாடகள் பிரச்சாரங்களில் அவர் தி.மு.க குறித்தோ கூட்டணி குறித்தோ பேசாதது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.