20% ஏழைகள் அடையாளம் காணப்படுவர்.. ராகுலின் திட்டம் சாத்தியம்.. ப.சிதம்பரம் விளக்கம்
Recommended Video
சென்னை: ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்திய பொருளாதாரம் சூறையாடப்படும் என்றும் 4 சதவீத பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். அதேநேரம் கடன் சுமையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதேபோல், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா.. மோடி பரபர அறிவிப்பு
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சுமார் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயனடையும் என்றார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும், ஏழைக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி திட்டம் முதலில் சோதனை அடிப்படையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்று செயல்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். வருவாய் உறுதி திட்டத்தால் 5 கோடி குடும்பங்களை சேர்ந்த 25 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
தொடக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என கூறியவர் அருண்ஜெட்லி என்று குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், மாதந்தோறும் ரூ.6000 குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.
முறைகேடுகள் நடைபெறாமல் இந்தியாவில் வாழும் 20% ஏழைகள் அடையாளம் காணப்படுவர் என்றும் படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.