ராகுல் காந்தி கல்லூரி நிகழ்ச்சி மணிரத்னம் படம் மாதிரி இருந்தது.. கே.எஸ்.அழகிரி சொல்கிறார்
சென்னை: மணிரத்தினம் திரைப்படம் போல ராகுல் காந்தியின் கல்லூரி நிகழ்ச்சி இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திமுக-காங்கிரஸ் இடையே, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்தார் கே.எஸ்.அழகிரி.
அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர். அப்போது காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பெயர்கள் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தகவல் தெரிவிப்பார் என்று கூறினார்.
காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை?.. திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. நாளை அறிவிப்பு
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்மறை அரசியல் பேசி மாணவிகளிடம், குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக நிருபர்களால் அப்போது, கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அழகிரி, மிகவும் நேர்மறையான, அன்பான, எளிமையான ஒரு தலைவர் ராகுல் காந்தி. தமிழக மக்கள் மீது அவர் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்.
மணிரத்னம் திரைப்படம் போல ராகுல் காந்தியின், கல்லூரி நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் இயல்பாக ராகுல்காந்தியின் உரையாடல் இருந்தது. அன்பின் மிகுதியால்தான் பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவினேன், என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதில் வெறுப்புப் பிரச்சாரம் எங்கே உள்ளது? இவ்வாறு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.