தொகுதிகளில் அடம் பிடிக்குமா காங்.? தமிழக நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸும் நீடித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கும் இதே கூட்டணியே தொடரும் நிலையே உள்ளது.
இருந்தபோதும் கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தது போல இம்முறை திமுக ஒதுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மிக அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை திமுக ஒதுக்கக் கூடும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும், திமுகவிடம் தொகுதிகளை கேட்க பேரம் பேசமாட்டோம் என கூறியிருந்தார். இதனால் திமுக ஒதுக்குகிற தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது, தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் கையாளும் அணுகுமுறை ஆகியவை தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றன தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள்.