தமிழகத்தில் மொழிப் போராட்டத்தை மீண்டும் தூண்டிவிடாதீர்கள்.. ரயில்வேக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கான துறை சார்ந்த தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில், ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபடவேண்டாம். ரயில்வே குரூப் சி தேர்வை, தமிழில் எழுதுவதற்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும்.
குரூப் சி தேர்வை இந்தியில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை, தமிழ் மொழியில் எழுதுவதற்கும் வழங்க வேண்டும். ரயில்வே ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொது போட்டித் தேர்வை தமிழில் நடத்த தேவை இல்லை என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில்வே துறை சார்ந்த பொதுத்தேர்வை, இந்தி ஆங்கிலத்தில், நடத்தினால் போதும். மற்ற மாநில மொழிகளில் எழுத உரிமை கோர முடியாது என்று ரயில்வே அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைத்திட வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.