சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்
Recommended Video
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கோவையின் பல பகுதிகளிலும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்வதால் வெயிலின்றி குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கருமேங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நாகை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது. தவிர திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மிதமானது முதல் நல்ல மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்து வந்த மழை, தற்போது சென்னையில் காலை 9 மணி முதல் பெய்கிறது.
மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், வளசரவாக்கம், போரூர், ராமபுரம் வடபழனி, சாலி கிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என நகரின் பல முக்கிய பகுதிகள் அனைத்திலும் மிதமானது முதல் நல்ல மழை இரவுக்கு பின் மீண்டும் தொடர்கிறது.
இதனால் தலைநகர் சென்னையின் கிளைமேட் குளிர்ச்சியாக மாறியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் காலாபேட், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இன்று அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலநிலையும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.