போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நாலு நாளைக்கு அடாத மழை விடாது பெய்யும்
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை ஜனவரி 13 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜனவரி முடியும் வரை விடாது போல அடைமழையாக பெய்து வருகிறது. தொடர்மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கியிருப்பதால் விளைந்த நெற்கதிர்களையும் பயிர்களையும் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் விவசாயிகள்.
இதனிடையே மழை மீண்டும் நீடிக்கும் என்றும் போகி தொடங்கி காணும் பொங்கல் வரைக்கும் அடை மழை விடாது பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூட மக்களுக்கு அனுமதியில்லை... ஜன.15முதல் 17 வரை தடை
இடியுடன் கனமழை
ஜனவரி 13ஆம் தேதி ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யகூடும்.
பொங்கல் நாளில் மழை
ஜனவரி 14ஆம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும். ஜனவரி 15ஆம் தேதி மற்றும் ஜனவரி 16ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
லேசான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
டெல்டாவில் அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஒருசில இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. பேராவூரணியில் 15 செமீ, தலைஞாயிறு , தஞ்சாவூரில் தலா 14 செமீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூண்டியில் 12 செமீ , குடவாசல், முத்துப்பேட்டை, 11 ,பட்டுக்கோட்டை 10, மதுக்கூர், மன்னார்குடி மணமேல்குடி, திருவாரூர் தலா 9 செமீ மழை பதிவானது. நாகப்பட்டினம், கும்பகோணம் , நன்னிலம், மஞ்சளாறு தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது, மயிலாடுதுறை, காரைக்கால் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சூறாவளிக்காற்று வீசும்
ஜனவரி 12ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி 13ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.