அன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா!
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்க முடியும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறவுள்ளது. இது பின்னர் புயலாக மாறும்.
இதன் காரணமாக அடுத்த 72 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னமானது தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடக்கு தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வரும் என்றும் அது புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் பேய்ட்டி புயல்.
இந்த புயல் காரணமாக வடக்கு கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் மிதமானது முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் இதுவரை போதிய அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இந்த மழையானது முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது சென்னையில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. பனியும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பேய்ட்டி புயல் நல்ல மழை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.