சென்னையில் இன்றும் மழை தொடர வாய்ப்பு.. நிலத்தடி நீர் உயர இன்னும் மழை வேண்டும்.. தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video
சென்னை: தலைநகர் சென்னையில் இன்றும் மழை தொடரும் என்றும், நிலத்தடி நீர்மட்டம் உயர இன்னும் மழை பெய்ய வேண்டும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளரும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதீப் ஜான், வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையானது இன்றும் சென்னையில் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வெப்பச்சலனம் காரணமாக பெய்யும் மழை இரவு நேரத்தில் தான் அதிகம் பெய்யும் என்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கென்று ஒரு நீர்பிடிப்பு இருக்கும். அந்த நீர்பிடிப்பு பகுதியில் ஒரே நேரத்தில் கனமழை பெய்யாது என குறிப்பிட்டார்.
செம்பரம்பாக்கத்தின் மேல் 40 முதல் 50 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கலாமே தவிர, வறட்சியை போக்கம் அளவிற்கு நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுக்காது. வறட்சியை போக்க கூடிய அளவிற்கு மழை என்றால் அது வடகிழக்கு பருவமழையின் போது தான் பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி எல்லா பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மழை பெய்யும் போது தான், நீர் பெருக்கெடுக்கும். தற்போது வெப்பசலனத்தால் ஏற்பட்டுள்ள மழையானது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 சதுர கிலோ மீட்டர் நீர்பிடிப்பு பகுதி என்றால், அதில் 10 முதல் 20 சதவீத இடத்தில் தான் மழை பெய்யும்.
அது நமக்கு நீரை பெருக்கெடுக்க செய்யாது. தற்போது பெய்துள்ள மழையால் நிலத்தடி நீர் உயராது. ஆனால் இதே போல இன்னும் பல நாட்களுக்கு தொடர் மழை பெய்தால் நிச்சயம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.