சென்னையில் காலையில் பெய்த கன மழை.. பள்ளி, கல்லூரி, ஆபீஸ் போனவர்கள் நிலை பெரும்பாடு
சென்னை: சென்னை நகரத்தில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் பலவற்றில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
நேற்று இரவு முதல், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையில், பள்ளி, கல்லூரிகள் அலுவலகம் செல்வோர் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மழை பெய்யும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாலங்களுக்கு அடியில் வாகனத்தை நிறுத்தி, மழை ஓரளவுக்கு குறைந்த பிறகு வாகனங்களை இயக்கியதை பார்க்க முடிந்தது. இருப்பினும் மழையின் தேவையை அறிந்து மக்கள் வரவேற்கவே செய்தனர்.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் மிதமானது முதல் ஓரளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று மதியம் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக பகுதிகள் மற்றும் பெங்களூருவில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு குளிரான தட்ப வெப்பம் நிலவி வருகிறது.