சென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ!.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்!
சென்னை: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் உருவாகவுள்ள நிலையில் இந்த மழையும் பூமியை நனைத்து விட்டு சென்றது.
வடகிழக்குப் பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் உருவானது. இந்த புயல் சென்னை- காரைக்கால் இடையே கடந்த 26-ஆம் தேதி கரையை கடந்தது.
இந்த நிலையில் 27-ஆம் தேதி சென்னையில் கடும் குளிர் வாட்டியது. புயல் சென்னையில் வடக்கே மிகவும் அருகில் சென்றதால் குளிர் ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.
தென் அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வெயில்
இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் வெயில் தலை காட்டி வருகிறது. இதையடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னையில் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதையடுத்து இன்று வானம் விட்டு விட்டு வெயில் காய்ந்தும், வெயில் இல்லாமலும் இருந்தது.
எங்கு மழை
இதையடுத்து மதியம் சென்னையின் முகப்பேர், ஹஸ்தினாபுரம், வடபழனி, சாலிகிராம், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. தற்போது சென்னையில் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மழை ஏன்
பொதுவாக கார்த்திகை தீபத்தன்று மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனால் இன்று மழை பெய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வங்கக் கடலில் அடுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ள நிலையில் அதனால் மழை பெய்ததா எனவும் தெரியவில்லை.
வெப்பச்சலனம்
இந்த திடீர் மழைக்கு காரணம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். வெப்பச்சலனம் ஏற்பட்டதா, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழையா என மக்கள் வானிலை ஆய்வறிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.