2 பேருக்கும் மழைதான் பிரச்சனை.. அதிபர் டிரம்ப்பும், முதல்வர் பழனிச்சாமியும் சந்தித்த ஒரே விமர்சனம்!
தமிழக முதல்வர் பழனிச்சாமியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மழை காரணமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மழை காரணமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இரண்டு பேருக்கும் மழை பெரிய தொல்லையாக மாறியுள்ளது. கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் இன்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார்.
ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் சென்னை திரும்பினார் முதல்வர்.
காரணம் என்ன
இதற்கு தமிழக முதல்வர் மழையை காரணமாக சொல்லியுள்ளார். மோசமான வானிலை நிலவுகிறது, அதனால் மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிரம்ப் என்ன சொன்னார்
கடந்த வாரம் முதல் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நாள் பிரான்சில் அனுசரிக்கப்பட்டது. முதல் உலகப் போரில் இறந்த அமெரிக்க வீரர்களுக்கும் இதில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் பிரான்ஸ் வரை சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மழையை காரணம் காட்டி அந்த நிகழ்விற்கு செல்லவில்லை. மிக முக்கியமான நிகழ்வு ஒன்றிற்கு மழையால் அதிபர் செல்லாதது இதுவே முதல்முறையாகும்.
வன்மையான கண்டனம்
இதை அமெரிக்கர்கள் வன்மையாக கண்டித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஒபாமா சென்ற போது கூட அங்கு மழை பெய்தது. மழையை காரணம் சொல்லாமல் ஒபாமா சென்றார். ஆனால் டிரம்ப் மழையை காரணம் காட்டி வேலையை செய்யாமல் இருக்கிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மீதும் அதேபோல் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. முதலில் ஹெலிகாப்டரில் சென்றதனால் முதல்வர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இப்போது மழையை காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.