1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க
சென்னை: சென்னையில் இன்று மாலை வெளுத்து எடுத்த மழை காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் எதிரொலியால் சென்னை நகரத்தில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
மதுரவாயல், வளசரவாக்கம், அசோக் நகர், கிண்டி, தாம்பரம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
சாலைகளில் வெள்ளம்
இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அது மட்டும் கிடையாது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு உள்ளே வெள்ளநீர் புகுந்துவிட்டது. அங்கு குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து சென்ற தாய்மார்களின் வெள்ள நீர் வழியாக நடந்து செல்லும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
எழும்பூர்
நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை சென்றால் அங்கும் வெள்ளநீர் காரணமாக நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது வேதனையின் உச்சம். உடனடியாக அரசு மற்றும் மாநகராட்சி இந்த விஷயத்தில் தலையிட்டு மருத்துமனையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
பெங்களூர் மழை
இதனிடையே சென்னையில் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் உள்ளிட்ட பல பகுதிகள், கர்நாடக மாநிலத்தின், தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாலையில் நல்ல மழை பெய்து உள்ளது.
மழை தொடரும்
இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.