புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Recommended Video
சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணம் ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி சீற்றமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வளி மண்டல சுழற்சி ஏற்பட்டு, தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தென்மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதர மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்கிறது.