சூப்பர் ஹெவி ரெயின்.. அதுவும் 4 நாளைக்காம்.. வெதர்மேனிடமிருந்து ஒரு ஹேப்பி நியூஸ்!
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல்
சென்னை: ஒரு நிம்மதியான செய்தி நமக்கு கிடைத்துள்ளது... ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். கொடூர கொரோனா பீதியில் இந்த தகவல் தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது!
Recommended Video
தமிழக மக்கள் அளவுக்கு அதிகமாகவே பயந்து போயுள்ளனர்.. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது.. அதனால் சில தினங்களுக்கு இருந்ததைவிட இப்போது சமூக விலகலையும், ஊரடங்கையும் மிக மிக தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். எனினும் ஒருவித கலக்கத்திலேயே இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் வெதர்மேன் ஒரு மகிழ்ச்சி தகவலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.. ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்களுக்கு நல்ல மழை நமக்கு கிடைக்க போகிறதாம்.
"விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது.. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.. ஏப்ரல் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
முன்காலையில் நல்ல வெயிலும் இருக்கும்.. அதே சமயம் கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறை சரக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.. அடுத்த 5 நாட்களில் அதிகபட்சமாக 35 மிமீ வரை மழை பதிவாகும். இதனிடையே, தமிழகத்தில் தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது" என்று குறிப்பிட்டுள்ளார். ஆக... அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மக்கள் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்!