சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றை போல் இன்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் , ஒரு சிலநேரங்களில், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சூழல் உருவானது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை இருந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. உளுந்தூர்பேட்டை, வண்டிப்பாளையம், குன்னத்தூர், மடப்பட்டு,அரசூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இரவு நேரத்தில், சேப்பாக்கம், திருவில்லிக்கேணி, மெரினா, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம், இன்று முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.