ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை.. இந்தியாவில் அதிகபட்ச மழை எங்கு?.. மழையே பெய்யாத பகுதி எது?.. வெதர்மேன்
சென்னை: கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அதாவது இரு மாதங்களுக்கு இந்தியாவில் எங்கெங்கு அதிக மழை பெய்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஒரே ஒரு இடத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த இரு மாதங்களாக அதுவும் கோடையில் வழக்கத்திற்கு மாறாக இந்தியா முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்பன் உள்ளிட்ட புயல்கள் கைங்கரியம் செய்தன.
மற்ற இடங்களில் வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த இரு மாதங்களில் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது, இந்தியாவில் எங்கு அதிகபட்ச மழை பெய்தது உள்ளிட்டவை குறித்து வெதர்மேன் பட்டியலிட்டுள்ளார்.
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு வெதர்மேன்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேகாலயாவில் மவுசினாரம் என்ற பகுதியில் 7,428 மி.மீ மழையும் ஆர்கேஎம் சிரபுஞ்சியில் 7,280 மி.மீ மழையும், சிரபுஞ்சியில் 7,078 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்ச மழை மவுசினாரமில்தான். அது போல் மகாராஷ்டிராவில் அம்போலியில் 4,210 மி.மீ மழை பெய்தது.
அதிக மழை
மேற்கு வங்கத்தில் அலிபுர்தூரில் 3,650 மி.மீ. மழையும், கர்நாடகாவில் வேந்த்சே பகுதியில் 3,636 மி.மீ மழையும், கர்நாடகாவில் ஹூலிக்கல்லில் 3,327 மி.மீ. மழையும் பெய்துள்ளது என்றார். அது போல் இந்திய அளவில் மழை எங்கு அதிகம் பெய்தது என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் மாநில வாரியாக எங்கெல்லாம் அதிக மழை பெய்தது என்பது குறித்தும் வெதர்மேன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை
அதன்படி மகாராஷ்டிரம், கர்நாடகா, வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம், கோவா ஆகிய பகுதிகளில் பெய்த மழையை பட்டியலிட்டுள்ளார். அது போல் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் பயனடைந்த பகுதிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 1,782 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதை அடுத்து கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 1,458 மி.மீ மழையும் பெரியக்கல்லாரில் 1,434 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
ஹைதராபாத் விமான நிலையம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டம், கோவை, சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குத்தான் மழை பொழிவை கொடுத்துள்ளது. அது மாநகரங்களில் பெய்த மழையில் முதலிடத்தில் மும்மை விமான நிலைய பகுதி உள்ளது. பின்னர் மும்பை நகரம், சூரத், கொல்கத்தா விமான நிலையம், கொல்கத்தா, அகமதாபாத் விமான நிலையம், புணே விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம், புணே நகரம் என்ற வரிசையில் சென்னை 10ஆவது இடத்தில் உள்ளது.
துளி
சென்னை விமான நிலையம் உள்ள மீனம்பாக்கத்தில் 323 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூலை மாதம் மட்டுமே 301 மி.மீ. மழை பெய்து 200 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றை பெற்றுள்ளது. அது போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட காலகட்டத்தில் ஒரு துளி மழை கூட பெய்யவில்லை என பதிவாகியுள்ளது.