மழை எப்படி பெய்தது... எல்லாம் அதிமுக செய்த யாகம் தான்... சொல்வது தமிழிசை
Recommended Video
சென்னை: அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால் தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் , மழை பெறுவதற்காக அனைத்து மதத்தினரும் வழிபட்டு வரும் நிலையில், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். யாகம் நடத்தினால் மழை வரும். போராட்டம் நடத்தினால் மழை வருமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
எதிர்மறை அரசியலை செய்து வெற்றி பெறலாம் என்று எதிர்கட்சியினர் நினைத்தால், இனிமேல் அது எடுபடாது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு தண்ணீர் எடுத்து வரக்கூடாது என திமுக கூறி வருவதாக தமிழிசை கண்டனம் தெரிவித்தார். கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் இல்லை; அது பயன்படுத்தப்பட்ட எரிசக்தி என்பதால் பாதிப்பில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பொதுமக்களுக்கு தண்ணீர் தேவைக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் என்று குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என்றார்.
மேலும், இஸ்ரேலில் உள்ளது போல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறை படுத்த வேண்டும். புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.