தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய, மழை பெய்தது. மழையோடு, மண் வாசமும் தூக்கியது.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் நகர பகுதிகள், பாலகிருஷ்ணாபுரம், கோவிலூர், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
சேலத்தில் சின்னக்கடை வீதி, அம்மாபேட்டை, பொன்னமாப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் மற்றும் கன்னங்குறிச்சி ஆகிய இடங்களில் மழை பெய்தது. மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நாகப்பட்டினத்தில் செல்லூர் ,புத்தூர், காடம்பாடி. பாப்பா கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மதுரை, தருமபுரி ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதாகவும் அதற்கு யாகங்களும் பிரார்த்தனைகளும் தான் காரணம் என மக்கள் நம்புவதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசி அவர், மழைக்காக அனைத்து தரப்பினரும் பிரார்த்தனை செய்தனர் என்று கூறினார்