செல்ல மழை, முத்து மழை... தலைநகரை குளிப்பாட்டிய மழை... மக்கள் பேரானந்தம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை காலம் 50 சதவீதம் முடிந்து விட்டது. ஆகஸ்ட் (இந்த மாதம்), செப்டம்பர் என 2 மாத காலங்கள் உள்ளன. இந்த 2 மாதத்திலும் ஓரளவு நன்றாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் காலையில் வெயில் காணப்பட்டநிலையில் மாலை வானிலை மாறியது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி, புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அசோக் நகர் சிட்லப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், பல்லாவரம், எழும்பூர், அண்ணாசாலை, காட்டுப்பாக்கம், முகப்பேர் என பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விடுமுறையில் மழை பெய்து இருப்பது, பலருக்கு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது. மழைகள் துள்ளி, குதித்து விளையாடி செல்பி, வீடியோ என சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.