சென்னையில் நள்ளிரவில் மழை.. வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை பெய்தது.
சென்னையில் வானம் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பகல் நேரங்களில் வெயில் வாட்டியது.
மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது.
அத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்!
சென்னையில் மழை
சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல்
மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதிகாலை வரை மழை
சென்னையில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல்
வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.
வெளுத்த மழை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்த மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
விடிய விடிய கனமழை
விழுப்புரம் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது,
இடியுடன் கனமழை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2 நாட்களுக்கு நீடிக்கும்
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.