மக்களே ஜில் ஜில் வீக்என்ட்... சென்னை உட்பட வட தமிழகத்தில் நாளை வரை மழை இருக்காம்!
சென்னை: சென்னை உட்பட வட தமிழகத்தில் நாளை வரை மிதாமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் வட மாநிலங்கள் உட்பட தமிழகத்தில் மேற்தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேவையான அளவு இல்லை
ஆனால் சென்னை உட்பட வட தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. அவ்வப்போது பெய்தாலும் வெப்பத்தை தணித்ததே தவிர தேவையான அளவு இல்லை.
விடிய விடிய மழை
இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கிண்டி, திருமங்கலம், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், தரமணி, வேளச்சேரி, திருவில்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வட தமிழகத்தில் மழை
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீடிக்கும்
இந்நிலையில் காற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.