சென்னையில் அக்டோபருக்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள்.. மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்படும் என, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழையால் சென்னைக்கு 20% மழை மட்டுமே கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கிறது.
மேலும் சென்னையின் நில அமைப்பு இயற்கையாகவே குறைவான மழை நீரை சேமிக்கும் திறன் கொண்டதாக உள்ளது என குறிப்பிட்டார்.
வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் சென்னையில் உள்ள 250 குளங்களில், சுமார் 150 குளங்களில் முழு அளவில் பராமரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் மழை நீரை சேமிக்க முடியும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பழைய கிணறுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கிணறுகளை கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கிணறுகள் எல்லாம் கடந்த 25 முதல் 30 வருடங்களாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ளவை. இந்த கிணறுகளை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து மழை நீரை கொண்டு வந்து கிணறுகளுக்குள் சேமிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
'கேப்டன்' விஜயகாந்தின் திட்டம் தான்... ஆந்திராவில் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை
மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்காக பழங்காலத்தில் வீடுகளில் அமைக்கப்பட்ட 90 ஆயிரம் கிணறுகளையும் சீரமைத்து பயன்படுத்த உள்ளோம். அதே போல மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த போவதில்லை என்றார் மாநகராட்சி ஆணையர். மேலும் மக்கள் தாங்களாகவே முன்வந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
எனினும் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 சதவீத வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால் எஞ்சிய 50 சதவீத வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை அப்படி இருந்தாலும் செயல்பாடில்லாமல் உள்ளது.
இது போன்ற வீடுகளுக்கு மாநராட்சி நிர்வாகம் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டுக்குள் 12 லட்சம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி விட சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் குறிக்கோள் வைத்து செயல்பட துவங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.