ராஜராஜ சோழன் பற்றிய பேச்சு.. ரஞ்சித் மீது மேலும் ஒரு காவல் நிலையத்தில் வழக்கு.. கைதுக்கு வாய்ப்பா?
சென்னை: ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரரசர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலம் என்பதாகவும், தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் பேசியிருந்தார். தலித்துகள் நிலங்களை ராஜராஜசோழன் பறித்ததாகவும் கூறினார்.
இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களிடமிருந்தும் கூட கண்டனங்கள் எழுந்துள்ளன, சமூக வலைத்தளங்களிலும் ரஞ்சித்துக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள். மீம்களும் போடப்படுகின்றன. அதேநேரம், ஒரு தரப்போ, ரஞ்சித் பேசியது சரி என கூறி வருகின்றன.
இப்படியான நிலையில், ராஜராஜ சோழனை அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், தானாக முன்வந்து வழக்குப்பபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
ராஜராஜ சோழன் விவகாரம்: இயக்குநர் ரஞ்சித் மீது திமுகவின் கே.எஸ். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக நகர தலைவர் சார்பில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில், ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரிலும், ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன் ஜாமீன் கோரி, ரஞ்சித், நீதிமன்றத்தை நாடுவார் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.