பார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்!
Recommended Video
சென்னை: என்னதான் பெண்ணாசையால் கொலை செய்யும் அளவுக்கு ராஜகோபால் சென்றிருந்தாலும் அவரது மறுபக்கத்தை பார்த்தோமேயானால் அதில் கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை போல் உள்ளது.
ஜீவஜோதி மீதிருந்த அளவுக்கு அதிகமான மயக்கத்தால் அவரது கணவர் சாந்தகுமாரை சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கொலை செய்தார். இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனையை அனுபவிக்காமல் அவர் இன்று மரணமடைந்துவிட்டார்.
ஒரு புறம் பெண்ணாசையால் கொலை செய்யும் அளவுக்கு அவர் சென்றாலும் அவரது மறுபுறம் பார்த்தோமேயானால் அது கல்லுக்கு ஈரம் இருப்பதை போன்றிருந்தது. ராஜகோபாலுக்கு தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது மிகுந்த அக்கறை.
பணியிலிருந்து நீக்கம்
சுவையான உணவை வழங்கிவந்ததால் இவருக்கு ஆரம்பக் கட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது விலை மலிவான மளிகை பொருட்களை வாங்கலாம் என்றும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கிய அதிகாரியை பணியிலிருந்து நீக்கினார்.
வாழை இலை
தரமான உணவை வழங்குவது மட்டுமின்றி ஊழியர்களின் பணிச் சூழலையும் நல்ல விதமாக வைத்திருந்ததே சரவணபவன் ஆலமரம் போல் விருட்சம் பெற காரணமாகும். சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை கொண்டு வந்தவர் அண்ணாச்சிதான்.
நல்ல தோற்றம்
இதற்கான காரணம், அவரது ஊழியர்களுக்கு தட்டை கழுவும் வேலை எளிதாக இருக்கும் என்பதால்தான். அது போல் மாதந்தோறும் தலைமுடியை திருத்தம் செய்யும் நடைமுறையையும் இவர்தான் கொண்டுவந்தார். இதனால் உணவு மீது முடி விழுவது தவிர்க்கப்படுவதுடன் ஊழியர்களும் நல்ல தோற்றத்தை வெளிப்படுத்த முடியும்.
ஊதிய உயர்வு
வேலை நேரத்தில் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படக் கூடாது என்பதால் இரவு நேர சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. அண்ணாச்சியின் ஹோட்டலில் பணிக்கு சேர்ந்தால் கடைசி வரை பணிக்கு உத்தரவாதம் உண்டு என அப்போது ஊழியர்கள் நம்பினர். ஊழியர்கள் தங்குவதற்கான இடத்தை தருவதோடு, காலாகாலத்துக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
நம்பிக்கை
ஊழியர்களின் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வந்தால் ஆண்டுதோறும் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. அது போல் ஒவ்வொரு ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுக்கு அண்ணாச்சி துணை நின்றார். ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட அவரை பார்த்துக் கொள்ள இரு ஊழியர்களை நியமித்தார் அண்ணாச்சி. ஒரு ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக் கொள்ள வழிவகுத்தாலே போதும் அவரால் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதே அண்ணாச்சியின் நம்பிக்கையாக இருந்தது.