வைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்
Recommended Video
சென்னை: சிறையில் ஒரு நாள் கூட காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற மன வைராக்கியத்துடன் சரவணபவன் ராஜகோபால் (72) மறைந்தார்.
ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுடையவர் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால். இவரது தொழிலில் சிறு சிறு சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார். அப்போது சிறிய வயது பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவீர்கள் என தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தன் ஹோட்டலில் பணிபுரியும் உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியின் ஜாதகத்தை ஜோதிடர் முன்பு காண்பித்தார் ராஜகோபால். உடனே ஜோதிடரும் உங்களுக்கு ஏற்ற பெண் இவர்தான். எனவே இவரையே மணந்து கொள்ளுங்கள் என்றார்.
மறைந்தார் சரவண பவன் ராஜகோபால்... சிறைக்கு போகாமலேயே உயிர் பிரிந்தது!
பிரின்ஸ் சாந்தகுமார்
இதையடுத்து ஜீவஜோதியின் தந்தையை எப்படியோ சம்மதிக்க வைத்த அண்ணாச்சியால் ஜீவஜோதியை வழிக்கு கொண்டு வர இயலவில்லை. இந்த நிலையில் தான் விரும்பிய பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி திருமணம் செய்து கொண்டார்.
உச்சநீதிமன்றம்
இதனால் ஆத்திரமடைந்த அண்ணாச்சி, சாந்தகுமாரை கடத்தி கொடைக்கானலில் கொலை செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
உடல்நிலை பாதிப்பு
சிறை தண்டனையிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து திடீர் உடல்நல பாதிப்பால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விஜயா மருத்துவமனை
இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என அவரது மகன் மனு தாக்கல் செய்திருந்தார். அதை உயர்நீதிமன்றம் ஏற்றதை அடுத்து அவர் மீண்டும் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வைராக்கியம்
இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இதையடுத்து அவர் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசி வரை ஒரு நாள் கூட சிறையில் காலடி வைக்கக் கூடாது என்ற மன வைராக்கியத்துடன் அவர் மறைந்தார்.