தட்டில் வாழை இலையை பரப்பி.. சுடச்சுட சோறு போட்ட ராஜகோபால் அண்ணாச்சி!
Recommended Video
சென்னை: சாப்பாட்டு தட்டின் மீது வாழை இலையை பரப்பி அதன் மீது சுடச்சுட சாப்பாடு போடும் பழக்கத்தை ஆரம்பித்தவர் சரவண பவன் அண்ணாச்சி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
எடுத்தவுடன் பணக்காரர் ஆகிவிடவில்லை ராஜகோபால். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர்.
ஒன்றும் பெரிசாக படிக்கவில்லை அண்ணாச்சி. 7-ம் வகுப்போடு நிறுத்தி விட்டார். ஒரு ஹோட்டலில் பெஞ்ச் துடைக்கும் வேலையில் சேர்ந்தார். துடைக்கும் பெஞ்ச்சுக்கு கீழேயே தரையில் படுத்து தூங்கியும் விடுவார்.
வைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்
நுணுக்கங்கள்
பிறகு ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன சின்ன தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். ஒரு கடையை எப்படி நடத்துவது என்பதை நேரடியாகவே அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டார். பிறகுதான் ஓட்டல் கடை வைப்பது வரை நடந்தது.
ஓட்டல்கள்
60"களில் ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது கவுரவக் குறைச்சலாக நினைக்கப்பட்டது. வீட்டு சாப்பாடு என்பதே சிறந்ததாக நினைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணம் 70, 80"களில் மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது. ஓட்டலுக்கு போய் சாப்பிடுவது என்பது கெத்தாக பார்க்கப்பட்டது. இதைத்தான் அண்ணாச்சி கப்பென பிடித்துகொண்டார்.
வார்த்தைகள்
நாகரீகத்துக்காக வருபவர்களுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பாடு போட நினைத்தார். "ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே" என்ற வார்த்தைகளுக்கு பதிலடி தந்தார். நஷ்டமே வந்தாலும் பரவாயில்லை, சுவையான, தரமான சாப்பாடு போட முடிவு செய்தார்.
சுடச்சுட சாப்பாடு
சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை சாமான் பொருட்களை கூட தரமானதாக, இன்னும் சொல்ல போனால் விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கி விடுவார் அண்ணாச்சி. அப்போதுதான் வாழை இலையை தட்டில் பரப்பி சுடச்சுட சாப்பாடு பரிமாறுவதை நடைமுறைப்படுத்தினார். இதனால் தட்டுக்களையும் உட்கார்ந்து கழுவ வேண்டியதில்லை.. கஸ்டமர்களுக்கும் வாழை இலையில் சாப்பிடும் திருப்தி ஏற்பட்டது. இது ஒருவகையில் உடலுக்கு ஆரோக்கியமும்கூட.
கஸ்டமர்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணாச்சி 2 விஷயங்களில் உறுதியாக இருந்தார். ஒன்று, கஸ்டமர்களின் திருப்தி.. மற்றொன்று, கடை ஊழியர்களிடம் கண்டிப்பு. எந்த காரணம் கொண்டும் கஸ்டமர்கள் ஒருகுறை சொல்லி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அண்ணாச்சி. ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல ஓய்வு, மாசத்துக்கு ஒருமுறை கட்டிங் செய்து கொள்ள வேண்டும் (சாப்பாட்டில் முடி விழ வாய்ப்புள்ளதால்), அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி செலவு என அள்ளி அள்ளி வழங்கினார். ஆரம்ப காலத்தில் அண்ணாச்சி போட்ட இந்த கண்டிப்பும், கண்டிஷனும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
கொடுப்பினை
வயிற்று பிழைப்புக்காக ஓட்டலில் பெஞ்ச் துடைக்க போன அண்ணாச்சி, இன்று ஊர், உலகத்துக்கே வயிறார சாப்பாடு போடும் நிலைமைக்கு உயர்ந்துள்ளார்.. இந்த கொடுப்பினை நிறைய பேருக்கு கிடைக்காது.