ராஜராஜ சோழனுக்கு பல சாதியில் பேரன்கள்... சினிமா இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு
சென்னை: ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதாகவும் சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் கடந்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, சினிமா இயக்குனர் பா.ரஞ்சித், தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். மேலும், அவர் ராஜராஜ சோழன் பற்றி கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, காவல்துறையினர், வழக்கு பதிவு செய்ததும், நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றார் பா. ரஞ்சித். நீதிமன்ற உத்தரவுப்படி, 2 நாட்களாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு சென்னை திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார்.
அப்போது ராஜராஜன் குறித்து தான் பேசியதை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார் என்றார். தனது பேச்சால், இந்து தேசியம் , தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல சாதியில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாக கூறி சிரித்தார் ரஞ்சித்.
ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க போவதில்லை என்றும் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கு ரஞ்சித்தை, நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அதே பாணியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.