"பரமாத்வே காப்பாத்து".. தேவையில்லாமல் டிவீட் போட்ட ராஜேந்திர பாலாஜி.. மா.செ. பதவி அதிரடி பறிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது
சென்னை: எத்தனையோ முறை சொல்லி பார்த்தாகி விட்டது.. "கவனமா பேசுங்க" என்று நேரடியாகவும், "அவரை அமைதியா இருக்க சொல்லுங்க" என்று மறைமுகமாகவும் சொல்லி பார்த்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்கவே இல்லை.. கடைசி வார்னிங் தரப்பட்ட நிலையில்தான் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி எது பேசினாலும் அது யதார்த்தமாக இருக்கும்.. மனசில் எதையும் வைத்து கொண்டு பேசுபவர் இல்லை.. மோடியை டாடி என்று பலமுறை சொல்லியவர் இவர்தான்.. அதனால்தான் உள்நோக்கத்துடன் பேசுபவர் என்று யாரும் இவரை சொன்னது கிடையாது.
ஆனால் சமீப காலமாக அப்படி இல்லை.. இவர் பேசுவது தெரிந்துதான் பேசுகிறாரா, தெரியாமல் பேசுகிறாரா? அவருடைய கருத்துக்களா, அல்லது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்துக்களா என்ற குழப்பம் தொண்டர்களிடையே ஏற்படும் அளவுக்கு வந்துவிட்டது. நாசூக்காகவே ஒருமுறை முதல்வர் இதை அமைச்சரிடம் எடுத்து சொல்லி உள்ளார். அதற்கு பிறகும் சர்ச்சை பேச்சு வெடித்தது.. குறிப்பாக இஸ்லாமியர்களின் மனதை புண்படும்படி இவர் பேசியிருந்தது பூதாகரமாக வெடித்து கிளம்பியது.
இந்துக்கள்
"இஸ்லாமிய பயங்கரவாதத்தைகையில் பிடித்துக்கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள். இப்படியே இந்துக்களை கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாக செல்லும். இந்துக்களை கொல்லும் இயக்கத்துக்கு திமுக துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்க முடியாது... இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அதிமுகவுக்கு பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது. இப்போது பத்து ஓட்டுகூட விழுவது இல்லை.. இளைஞர்களை பிரெய்ன் வாஷ் செய்கிறார்கள்... ஆயுதம் ஏந்த வைக்கிறார்கள்" என்றார்.
திமுக மனு
கடைசியில் இந்த விவகாரம் ஆளுநரிடம் திமுக மனு அளிக்கும்வரை போய்விட்டது.. இது முதல்வருக்கு தர்மசங்கடத்தையே திரும்பவும் ஏற்படுத்தியது... இந்த நிலையில்தான விருதுநகரைச் சேர்ந்த செய்தியாளர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அமைச்சருக்கு எதிராக கண்டனத்தை மொத்தமாக கொண்டு வந்து குவித்தன.. இந்த விவகாரம் முற்றிய பிறகு ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார் போன்றோர் முதல்வரிடமே அமைச்சரை பற்றி புகார் கொண்டுபோய் விட்டதாகவும், இதையடுத்து, எடப்பாடியார் அமைச்சரை கூப்பிட்டு கடைசி வார்னிங் தந்ததாகவும்கூட செய்திகள் கசிந்தன.
பதவி பறிப்பு
இந்நிலையில்தான் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியை அதிமுக தலைமை பறித்துள்ளது. விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர். 'விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில், ராஜேந்திர பாலாஜியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை... ஆனாலும் அமைச்சர் பதிவிட்ட ட்வீட் ஒன்றுதான் இந்த பதவி பறிப்புக்கு அடிப்படை காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
பரமாத்மா
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்ககூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை-. இறைவா ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனாவிடமிருந்து காப்பாற்று" என்று பதிவிட்டிருந்தார் (பின்னர் இதை நீக்கி விட்டார்). இதுதான் பதவி பறிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
மாவட்ட செயலாளர்
மாவட்ட செயலாளர் பதவி என்பது ஒரு கட்சியில் முக்கியமான பொறுப்பு... மாவட்ட எம்பி முதல் எம்எல்ஏக்கள் வரை மாவட்ட செயலாளர்களை மீறி எதுவுமே செய்ய முடியாது.. எம்எல்ஏக்களை பரிந்துரை செய்வதும், அவர்களை வெற்றி பெற வைப்பதும் என எல்லாமே மா.செ.க்களின் பொறுப்புதான்.. இந்த பதவிக்கு ஏராளமான போட்டா போட்டி கட்சியில் நடக்கும்.. அப்படிப்பட்ட முக்கியமான பதவியை அமைச்சரிடம் இருந்து பிடுங்கி உள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அடுத்த மாவட்ட செயலர் யார் என்ற கேள்வியும் அதிமுகவினரிடையே எழுந்து வருகிறது.
அதிமுக-பாஜக
எடப்பாடியின் இந்த 2 ஆண்டு கால ஆட்சியில் பதவி பறிப்பு என்பது அரிதான ஒன்றுதான்.. சமீபத்தில்தான் அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக மணிகண்டன் நீக்கப்பட்டார். அதுகூட எடுத்த எடுப்பிலேயே முதல்வர் அதை செய்யவில்லை.. எடப்பாடியாரின் காதுகளுக்கு பல புகார்கள் கொண்டு போகப்பட்டு, அதன்பிறகு பலமுறை வார்னிங் தரப்பட்ட பிறகே பதவி பறிக்கப்பட்டது.. மணிகண்டனை அடுத்து ராஜேந்திர பாலாஜி அடுத்த நபர் ஆவார்.. பொறுப்பில் இருந்தபோதே இவர் அதிமுக அமைச்சரா, பாஜக அமைச்சரா என்று கேள்விகள் உலா வந்த நிலையில், இனி ராஜேந்திர பாலாஜி என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!