"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்!
முக ஸ்டாலினை ராஜேந்திர பாலாஜி சரமாரியாக விமர்சித்துள்ளார்
சென்னை: திண்டுக்கல் சீனிவாசனே தேவலாம் போல இருக்கிறது.. அபாண்டமாக ஒரு விஷயத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசப்போய், அது இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடனுடன், இங்குள்ள இரட்டை இலையை ஒப்பிட்டு பேசி உள்ளார் அமைச்சர்!
Recommended Video
அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது.. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசியபோது, வழக்கம்போல ஸ்டாலினை சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.
"திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டங்களில் மூலம் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே 2 முறை அவரால் முதல்வராக ஆகாத போது, அவர் மகனால் எப்படி முதல்வராக முடியும்? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் அவங்களே இப்போது நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறார்கள்.
நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் திமுகவின் தூண்டுதலால் தான் தற்கொலையே செய்துக்கிட்டாங்க.. திமுக தலைவர், எங்களுக்கு நாள் எண்ணிட்டு இருக்கிறார்.. நீங்க எண்ணும் நாட்கள் எல்லாம் உங்களுக்குதான்.. ஸ்டாலினீன் ஆட்டத்தை ஆண்டவனாலும் முடிக்க முடியாது.. தமிழகத்தையே குட்டிச்சுவராக்கி, தமிழகத்தை தரிசாக்கிவிட்டு, கலைஞர் குடும்பம் மட்டும்தான் இன்னைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது..
தமிழ்நாட்டுக்கு நீ என்ன பண்ணியிருக்கே? உங்க சொத்து என்ன? அன்னைக்கு உங்க சொத்து என்ன? 32 சேனல் வெச்சிருக்காங்க.. டிவியை எங்கே திருப்பினாலும் இவங்கதான் வர்றாங்க.. கொஞ்ச நஞ்சம் பணமா?
கொலை பண்ணவன், கொள்ளை அடிச்சவன், ஊரை கெடுத்தவன், நாட்டை கெடுத்தவன், உலகத்தை கெடுத்தவன், தமிழை அழிச்சவன் எல்லாம் யாரு? மக்கள் யாரையும் மறக்கலையே.. பெரிய ஆப்பு திமுகவுக்கு மக்களே வெக்க போறாங்க..!
ரஜினி மன்றத்தின் முக்கியமான ஆளுங்க எல்லாம் நம்ம கிட்ட வந்துட்டாங்க.. திமுகவுல யாரு இருக்காங்க? சாமியே இல்லைன்னு சொன்னது யாரு திமுகதான்.. திருநிறு பூசமாட்டான், குங்குமம் வெக்க மாட்டான், சாமியை நம்ப மாட்டான், பொண்டாட்டியையும் நம்ப மாட்டாங்க.. புள்ளைங்களையும் நம்ப மாட்டான்.. ஓரு பயலும் இன்னொருத்தரை நம்ப மாட்டாங்க.. அவங்கதான் திமுக காரங்க.தான்.
அமெரிக்காவில் பதவி ஏற்க போறாரே, அவர் பேர் என்ன? ஜோ பைட்டனா? அவர் இரட்டை இலையை காட்டறார்.. உலகம் முழுக்க இரண்டு இலையை காட்டறார்.. ஏன்? அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கத்தான், ஜோ பைட்டன் 2 விரலை காட்டுகிறார்" என்றார்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுக்கள் வழக்கம்போல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. மேலை நாடுகளில் வழக்கமாக வெற்றியை அதாவது விக்டரியை குறிக்கும் விதமாகத்தான் "வி" என்ற அடையாளத்துடன் இரண்டு விரல்கள் காட்டப்படும்.. அதைதான் எம்ஜிஆரும் இங்கு கையாண்டார்.. சின்னமும் அதற்கு சாதமாகி போனது... இந்த விவரமும் இல்லாமல், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல், இரட்டை இலைக்கு ஜோ பிடனை உதாரணத்தை அமைச்சர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.. அதைவிட அமைச்சர் பேசும்போது, அதற்கு கை தட்டியவர்களை நினைத்தால் அதைவிட வேதனையாக இருக்கிறது.