திருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா!
சென்னை: கோயில் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்தில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. விழுப்புரம் எம்பி தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் எம்பி தொகுதியில் திருமாவளவனும் போட்டியிட்டனர்.
அவர்களை தங்கள் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக கூறியதால் சிறுத்தைகளுக்குள் சலசலப்பு எழுந்தது. அது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்னியர்களின் வாக்குகளை கவருவதற்காக ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளால் திருமாவளவன் அதிருப்தி அடைந்தார்.
விடுதலை சிறுத்தைகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக வர இருந்தது. ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கூறியதால் பாமகவை கூட்டணியில் இணைக்கவில்லை.
திமுகவில்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைவிட அதிகமான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் திமுகவில் உள்ள வன்னியர்களையும் மற்ற சாதி தலைவர்களையும் திருப்திப்படுத்த உள்ளாட்சி தேர்தலில் விசிகவை கழற்றிவிட்டுவிட்டு பாமகவை இணைத்து கொள்ளலாம் என ஒரு பேச்சு திமுகவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக கண்டிப்பு
அதுபோல் தங்கள் கட்சி ஓரங்கட்டப்படுவதை திருமாவளவனே பல சூழல்களில் உணர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது போல் திருவள்ளுவருக்கு காவி உடை உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜகவை அதிமுக கண்டித்தது.
முதல்வருடன் சந்திப்பு
ஆனால் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் பாமக அது குறித்து வாய் திறக்கவில்லை. எனவே பாமக இல்லாவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இணைக்க அதிமுகவும் யோசித்து வருகிறதாம். இதனிடையே உதயநிதியை சென்னை மேயராக்க திமுகவினர் துடித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்து இது தொடர்பாக முதல்வரையும் போய் சந்தித்துள்ளார் திருமா.
ஆணித்தரம்
அச்சமயம் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவில் கூட்டணியில் உள்ள சிலர் அதிமுகவுக்கு வருவர் என ஆணித்தரமாக கூறியுள்ளார்.
உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்
கோயில் கோபுரத்தில் உள்ள சிலைகள் குறித்து திருமாவளவன் அவதூறாக ஒரு கருத்தை தெரிவித்ததாக பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்த போது கோயில் விவகாரம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்
எனவே இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்து பார்க்கையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை எதுவும் சொல்வதற்கில்லை.