பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : காவல்துறையை களங்கப்படுத்தி விட்டார் ராஜேஷ் தாஸ் - ஈஸ்வரன் கண்டனம்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு கொண்டாடும் நிலையில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி திரு.ராஜேஷ் தாஸே ஒரு பெண் காவல்துறை அதிகாரியிடம் அருவருப்பான செயலில் அத்துமீறி ஈடுபட்டிருப்பது தமிழக காவல்துறையையே களங்கப்படுத்தி இருக்கிறது என்று ஈ.ஆர். ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி இருப்பது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உயர் பதவியில் இருக்கிறோம் யார் என்ன செய்து விட முடியும் என்ற தைரியத்தில் பாலியல் சீண்டல்களை பெண்களுக்கு எதிராக சர்வ சாதாரணமாக செய்ய துணிகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸே ஒரு பெண் காவல்துறை அதிகாரியிடம் அருவருப்பான செயலில் அத்துமீறி ஈடுபட்டிருப்பது தமிழக காவல்துறையையே களங்கப்படுத்தி இருக்கிறது.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களில் அதிகார மையத்தில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் மென்மையான போக்கை கடைபிடித்து குற்றவாளிகளை காப்பாற்றுவதே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம்.
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியல்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும், கயவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க முடியும். பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்ற சிறப்பு டிஜிபி மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் உடனடியாக எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அமைத்திருக்கும் விசாகா கமிட்டி இந்த குற்றச்செயலை நீர்த்துப் போக செய்து குற்றவாளியை காப்பாற்றி விடக்கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் எச்சரிக்கின்றோம். இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா அல்லது அதிமுகவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கின்ற தினமா ?. என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஈஸ்வரன்.