ஹிந்தியில் காதல் பாட்டு பாடு.. கரூர் டூ கள்ளக்குறிச்சி வரை பெண் ஐபிஎஸ்ஸை தொல்லை செய்த ராஜேஷ் தாஸ்!
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகாரை அடுத்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள ராஜேஷ் தாஸ், அந்த பெண் அதிகாரியிடம் ஹிந்தியில் காதல் பாட்டு பாடச் சொல்லி தொல்லை செய்தது விசாரணையில் அம்பலமானது.
Recommended Video
காவல் துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் டிஎஸ்பி அந்தஸ்துடைய இரு பெண் அதிகாரிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
சென்னை
இரு தினங்களுக்கு முன்னர் கூட திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பணியில் ராஜேஷ் தாஸ் இருந்தார். பிரச்சாரம் முடித்துக் கொண்டு சென்னை திரும்ப ஆயத்தமானார் ராஜேஷ் தாஸ்.
கள்ளக்குறிச்சி
அப்போது சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை தொடர்பு கொண்டார் ராஜேஷ். உங்களிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என கரூருக்கு வரவழைத்துள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி வரை அந்த பெண் அதிகாரியை இந்தியில் காதல் பாட்டு பாடுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த பெண் அதிகாரியிடம் ஆரம்பத்திலிருந்தே தொட்டு தொட்டுதான் பேசுவாராம்.
பிடியில் இருந்து தப்பிய பெண்
சம்பவத்தினத்தன்று அந்த பெண் அதிகாரியின் அந்தரங்கத்தில் ராஜேஷ் தாஸ் கை வைத்து பேசியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண் அதிகாரி, உங்களின் மகள் வயதில் இருக்கும் என்னிடம் இது போல் நடந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திவிட்டு எப்படியோ அவரது பிடியில் இருந்து தப்பிவிட்டார்.
ஆதாரங்கள்
இதையடுத்து அந்த பெண் புகார் அளிக்க செல்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பிக்கு போன் போட்டு அந்த பெண் அதிகாரியை மடக்கி பிடிக்குமாறு கூறியுள்ளார். அங்கிருந்தும் தப்பிய அந்த பெண் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.