"சரக்கு" இல்லாம மிரள வைத்ததெல்லாம் ஓகேதான்.. ஆனால் மக்களுக்காக இப்படி போராடிருக்கீங்களா!?
சென்னை: ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துனீங்களே? இந்த 25 ஆண்டுகளில் எந்த பிரச்சினைக்காவது தமிழக மக்கள் நலனுக்காக இப்படி போராட்டம் நடத்தியிருக்கீங்களா? என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
காந்தியடிகள் காலத்திலிருந்தே உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை என நியாயத்தை நிலை நிறுத்த அமைதியான வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது போன்று தற்போதையை அரசியல் களத்திலும் பின்பற்றப்படுகிறது.
மக்கள் நலனுக்கு ஏற்றது அல்ல என்றால் அரசியல்கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பேரணி என நடத்துகிறார்கள். போராட்டம் என்பதே, தங்களது கோரிக்கை உரிய வழியில் நிறைவேறாத போது, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படுவதுதான்.
ரசிகர்களை தூண்டியது மாஜி மன்றத்தினரா?.. அப்போ மாஜிக்களை தூண்டிவிட்டு நெருக்கடி கொடுப்பது யார்?
கொடி காத்த குமரன்
இது போன்ற போராட்டங்களில் உயிரை தியாகம் செய்தவர்கள் ஏராளம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட கொடி காத்த குமரன் மரணமடைந்தார். அது போல் சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்ற பலர் தங்கள் உயிரை தியாகம் செய்த சம்பவங்களும் உள்ளன. போராடியதால்தான் சுதந்திரமே கிடைத்தது... அதுபோல் தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் இரையாகினர்.. அந்த போராட்டத்தின் விளைவுதான் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியவில்லை.
வாழ்க்கை
தங்கள் உரிமைக்காகவும், வாழ்க்கைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் நேற்று ரஜினி ரசிகர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள். முதலில் அறவழியில் நடத்திய போராட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
3 பக்கங்கள்
தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னால் அரசியலுக்கு வர இயலாது என்றும் தன்னை மன்னித்து விடுமாறும் ரஜினி 3 பக்கங்கள் கொண்ட அறிக்கையை விட்டிருந்தார். அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் யாருக்கு என்ன நடந்தால் என்ன? என்பதை போல இவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
போராட்டம் நடத்தலையே
இது போன்ற ஒரு போராட்டத்தை இவர்கள் இதுவரை தமிழக மக்கள் நலனுக்காக முன்னெடுக்காதது ஏன்? நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம், நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட், புதிய கல்விக் கொள்கை என இப்படி எந்த விஷயத்திற்காகவாவது இவர்கள் போராடியிருக்கிறார்களா என்றால் இல்லை. குறைந்தபட்சம் விவசாயிகளுக்காக கூட இவர்கள் வள்ளுவர் கோட்டம் பக்கம் கூடவில்லை. இதே வள்ளுவரை காவிச் சாயம் பூசியதைக் கண்டித்துக் கூட இவர்கள் போராட்டம் நடத்தலையே!
போராடியிருக்கலாம்
ரஜினியே மேற்கண்ட பிரச்சினைகளில் அதிகபட்சமாக வாய் திறக்கவில்லை என்பது வேறு. ஆனால் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு போராடியிருந்தால் ரஜினிக்கு என ஒரு பிராண்ட் உருவாகியிருக்கும். ஒரு வழியில் சொல்வதானால் ரஜினி பெயர் கெட அவரது ரசிகர்களும் கூட ஒரு காரணம்தான். அரசியலுக்கு வர போவதில்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் பிரச்சாரம் செய்யாமல் வீடியோ காலில் மக்களிடம் பேசினால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறதா என அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம் அவர் கேட்டிருந்ததாக சொல்லப்பட்டது.
நிச்சயம்
ஒரு வேளை ரசிகர்கள் இது போன்ற போராட்டங்களில் மக்களுக்கு துணையாக இருந்திருந்தால் நிச்சயம் மக்கள் முன் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று மட்டும் போராட்டம் நடத்துவது எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து அல்ல என்பதை நம்ப முடியலையே!