மண்சோறு, விரதம், பூஜை.. சிட்டிக்காக களத்தில் குதித்த ரஜினியின் ''ஆன்மீக ஃபேன்ஸ்''.. 2.0 வைரல்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் பூஜை செய்து வருகிறார்கள்.
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் பூஜை செய்து வருகிறார்கள்.
2010ல் எந்திரன் படம் வந்த போது படத்தின் கிளைமேக்சில் இரண்டாம் பாகத்திற்காக சின்ன லீட் வைத்து இருந்தார் இயக்குனர் சங்கர். ஆனால் அந்த இரண்டாம் பாகம் முழு படமாக உருமாறி வர இத்தனை வருடங்கள் எடுத்து இருக்கிறது.
எல்லோருக்கும் போன மாதமே தீபாவளி முடிந்துவிட்டாலும், ரஜினி ரசிகர்களுக்கு நாளைதான் தீபாவளி. ஐ வில் செட் யுவர் ஸ்கிரீன்ஸ் ஆன் பயர் என்று 2.0 டீசரில் ரஜினி சொல்வது போலத்தான் நிஜத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு அவரது ரசிகர்கள் 2.0 படத்திற்காக தீவிரமாக காத்து இருக்கிறார்கள்.
கட் அவுட் பறக்குது
ரஜினி படங்களிலேயே அதிக கட் அவுட் வைக்கப்பட்ட படங்களில் 2.0 தான் முதல் இடம் பிடிக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சென்னை தொடங்கி குமரி வரை கட் அவுட்களால் 2.0 படம் வெளியாகும் தியேட்டர்கள் நிரம்பி இருக்கிறது. எங்கயா இங்க இருந்த தியேட்டரை காணும் என்று கேட்கும் அளவிற்கு பேனர்களை வைத்து குவித்து இருக்கிறார்கள்.
சாமி தரிசனம்
அதேபோல்தான் ரஜினியின் ஆன்மீக ரசிகர்கள், அவருக்காக கோவில், குளம் என்று சுற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். மதுரை, நெல்லை, திருச்சியில் உள்ள பல கோவில்களில் இன்று ரஜினி பெயரிலும் 2.0 பெயரிலும் பூஜை செய்தனர். பல கோவில்களில் நாளையும் 2.0 படத்திற்காக சிறப்பு பூஜை செய்ய இருக்கிறார்கள்.
மண் சோறு பூஜை
அதேபோல் திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து மண் சோறு சாப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் சிலர் அதே கோவிலில் அங்கபிரதட்சணம் செய்து இருக்கிறார்கள். சிலர் விரதம் இருந்து, சாப்பிடாமல் நாளை படம் பார்க்க திட்டமிட்டு உள்ளனர்.
வைரலாகி வருகிறது
2.0 படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களின் செயலால் இப்போதே படு வைரல் ஆகியுள்ளது. 8 வருடத்திற்கு பின் ரஜினியும் சங்கரும் சேர்ந்து பணியாற்றி வெளியாகும் படம் என்பதால், இந்தியாவே இந்த படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. நாளைக்கு பர்ஸ்ட் ஷோ வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. குக்கூ!