அந்த தெளிவு.. அந்த தைரியம்.. பிரகாஷ் ராஜிடமிருந்து இதை கொஞ்சம் கற்றுக்கொள்வாரா ரஜினிகாந்த்?
நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியலில், நடிகர் ரஜினியை விட வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியலில், நடிகர் ரஜினியை விட வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ராஜின் அரசியல் முன்னெடுப்புகள் பெரிய கவனம் பெற்றுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் வைரலாகி உள்ளது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக பேசி வரும் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக தனது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் எதாவது ஒரு தொகுதியில் அவர் நிற்க வாய்ப்புள்ளது.
அரசியல் தெளிவு
நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பாஜகவை எதிர்த்தாலும் அவரிடம் அரசியல் தெளிவு இருக்கிறது. இதுதான் தன்னுடைய கொள்கை என்று பலமுறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி இன்னொருமுறை பிரதமராக வர கூடாது என்று வெளிப்படையாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
ரஜினி மழுப்பல்
ஆனால் ரஜினி இதுவரை அப்படி வெளிப்படையாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தது கிடையாது. பாஜகவிற்கு ஆதரவாக பேசும் போது கூட, ரஜினி வெளிப்படையாக ஆதரவாக பேசியது கிடையாது. 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பது போல மழுப்பலாகத்தான் பதில் அளித்து இருக்கிறார். எங்கும் தன்னுடைய கொள்கை இதுதான் என்று ரஜினி நேரடியாக பேசியது கிடையாது.
தேர்தல் போட்டி
வெளிப்படையாக அரசியல் பேட்டிகளை அறிவித்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று கூறியுள்ளார். எங்கு போட்டியிடுவேன் என்பதை பின்பு அறிவிக்கிறேன் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம் ரஜினி
ஆனால் கட்சி தொடங்க போவதாக ஒருவருடம் முன் அறிவித்த ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. எந்த தேர்தலில் போட்டியிட போகிறேன், எப்போது முழுக்க அரசியலுக்கு வருவேன் என்பதையும் கூட அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. அவரின் ரசிகர்களே ரஜினியின் இந்த நடவடிக்கைகளை பார்த்து அயற்சியில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
கேள்வி கேட்பேன்
மிக முக்கியமாக, பிரகாஷ்ராஜ் தான் தனியாக போட்டியிட போகிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் ஆட்சி இனி அமையும் என்று ''மோடியின் ஆப்கி பார் மோடி சர்க்கார்'' வசனத்தை மாற்றி ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்'' என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன் என்றும் தைரியமாக தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினி இதுபோல தைரியமாக இதுவரை பேசியது கிடையாது.
ரஜினிக்கு வருமா
பிரகாஷ் ராஜை விட பேரும் புகழும் கொண்டவர் நடிகர் ரஜினி காந்த். ஆனால் பிரகாஷ் ராஜுக்கு இருக்கும் அரசியல் தெளிவு ரஜினிக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் ரஜினி தனது கட்சியை ஆரம்பிப்பதும், அரசியல் குறித்து தெளிவாக பேசுவதுமே ரஜினியின் அரசியல் ஆசைக்கு ஊன்று கோலாக இருக்கும்! அதை ரஜினி இந்த புது வருடத்திலாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.