ரஜினி என் நண்பர்... சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் ஆதரவு கேட்பேன் - கமல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டசபை தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கேட்கப்போவதாக கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ரஜினி எனது நண்பர் என்றும், எல்லோரிடமும் ஆதரவு கேட்கும் போது அவரிடம் மட்டும் கேட்காமல் இருப்பேனா என்றும் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கிய கமல்ஹாசன் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழக அரசின் பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர்.
இன்னும் 8 ஆண்டுகள் அரசுப் பணி இருந்தபோதும் மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார்.
வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலோடும் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.
மிகச்சரியான முடிவினை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபுவை மனதாரப் பாராட்டுகிறேன். அவரை பொதுச் செயலாளர் - தலைமை அலுவலகம் நியமித்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர், இதிலும் தடம் பதிப்பார் என்பதில் ஐயம் இல்லை என்று கூறினார் கமல்ஹாசன்.
200 பேருக்கு மட்டும்தான் அனுமதியாம்... சுற்றுப் பயணத்தை கேன்சல் செய்துவிட்டேன்: கமல்ஹாசன்
அப்போது கமலிடம், சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?, ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.