முதலமைச்சருக்கு... வடகிழக்கில் இருந்து வந்த வாழ்த்துமழை... அமைதிகாத்த ஜெகன், எடியூரப்பா, ரஜினி...!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 66-வது பிறந்தநாள் என்பதால் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது.
ஆனால் அதே வேளையில் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, முதலமைச்சர்களிடம் இருந்தோ, நடிகர் ரஜினிகாந்திடம் இருந்தோ அவருக்கு வாழ்த்து வரவில்லை. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறாதது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தொலைபேசி மூலமும், ட்வீட்டர் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் இருந்தும் அம்மாநில முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
முகத்தில் இருக்கும் புன்னகை மக்கள் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள்- எடப்பாடியாருக்கு கமல் வாழ்த்து
நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இந்த சூழலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிற்பகலுக்கு பிறகு முதலமைச்சருக்கு வாழ்த்துக் கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகையை மக்கள் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள் என வஞ்சிப்புகழ்ச்சி அணியில் வாழ்த்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.